எரிவாயு அடுப்பு வெடித்ததில் முற்றுமுழுதாக எரிந்து நாசமாகிய வீடு!
மன்னாரில் எரிவாயு அடுப்பு வெடித்ததில் வீடு ஒன்று முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரவான் கோட்டை பகுதியிலேயே இன்று வியாழக்கிழமை நண்பகல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
தரவான் கோட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக வீடு எரிந்து முற்றுமுழுதாக நாசமாகிய நிலையில், குறித்த பெண் அதிர்சியின் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார்.
அதனையடுத்து அவர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசிப்பதுடன் பனம் பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையிலேயே இன்றைய தினம் இவ்வாறான வெடிப்பு சம்பவம் இடம்பெற்று பெண் வசித்த முழு வீடும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அருகில் இருந்த கிராம மக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் நகரசபை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்திற்கு என தனியான ஒரு தீயணைப்பு ஏற்பாடு இன்மையால் இவ்வாறான பல தீவிபத்துக்களால் பாரிய சேதங்களை ஏற்பட்ட பின்னரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.