புதிய தவிசாளர் தெரிவு- பிரதேச சபையை சுற்றி காவல்துறைப் பாதுகாப்பு; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்ற போது செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் (patrick niranjan) தலைமையில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.
இந்நிலையில், புதிய தவிசாளர் தெரிவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்(charles nirmalanathan) மற்றும், காதர் மஸ்தான்(kathar masthan) ஆகியோரையும் கலந்து கொள்ள காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
மன்னார் பிரதேச சபையை சுற்றி காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதோடு, பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவில் கலந்து கொள்ளச் சென்ற மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் காவல்துறையால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் பிரதேச சபையின் பணியாளர்களும் சோதனையின் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வடமாகாண ஆளுநரால் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாகிர்(s.h.m.muyahir) தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.







