மன்னார் துப்பாக்கிச் சூடு விவகாரம் : கைதானவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மன்னார் (Mannar) நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மன்னார் நீதிமன்றத்தில் நேற்று (10) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கைதுசெய்யப்பட்ட 7 சந்தேக நபர்களில் ஏற்கனவே 5 சந்தேக நபர்கள் அடையாள அணி வகுப்பிற்கு முற்படுத்தப்பட்ட நிலையில் ஏனைய இரு சந்தேக நபர்களுக்கு ஆள் அடையாள அணிவகுப்புகள் நேற்றைய தினம் (10) இடம்பெற இருந்தது.
விளக்கமறியலில் வைக்க உத்தரவு
இந்த நிலையில் அடையாளத்தை காண்பிப்பதற்காக வருகை தர இருந்த இருவரும் நேற்றைய தினம் (10) மன்றில் முன்னிலையாகவில்லை.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
குறித்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறை புலனாய்வுத்துறை முன்னெடுத்து வருவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்தவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு பெண் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் படுகாயமடைந்தனர்.
நீதிமன்றில் விசாரணை
இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கையின் போது பிரதான சந்தேக நபர்கள் உள்ளடங்கலாக 7 பேரை மன்னார் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் இராணுவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் அடங்குகின்றனர்.
குறித்த 7 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (10) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன் போது விசாரணைகளை ட்மேற்கொண்ட நீதவான் குறித்த 7 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)