“வடக்கு ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு” மனோ கணேசன் வெளியிட்டுள்ள தகவல்
வடக்கில் உள்ள நான்கு மாவட்டங்களின் காணி ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
“யாழ்ப்பாணத்திலிருந்த வட மாகாண பிராந்திய காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம், இப்போது யாழ் மாவட்ட அலுவலகமாக குறைக்கப்பட்டு, வடக்கின் ஏனைய நான்கு மாவட்டங்களின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக காணியமைச்சர் சந்திரசேன பதிலளிக்க வேண்டும்” என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
கடந்த 4ஆம் திகதி ஆவணங்களை எடுத்துச் செல்ல முற்பட்ட போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பொது மக்களும் யாழ்.செயலக வாசலுக்கு முன்பாக ஒன்று கூடி கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.
ஆனால் இது காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் முடிவு என்றும் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை அவசர அவசரமாக அனைத்து ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening