கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
எதிர்வரும் 02ம் திகதி திங்கட்கிழமை கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
இன்று தாயகம் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வன்னி பிரதேசத்தில் கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவில் வாழ்கின்ற மக்களின் இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாட்டினை முன்னெடுக்கும் நோக்குடனும், எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தை அழிக்கின்ற செயற்பாடாக இத்திட்டம் அமையவுள்ளது.
பாரியளவான காட்டினை அழிப்பதற்கு உறுதுணை
அத்தோடு வனவளத்திணைக்களமே குறித்த பிரதேசத்தினுடைய பாரியளவான காட்டினை அழிப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்கும் நாம் எதிர்ப்பு தெரிவிப்பதோடு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுக்கவுள்ளோம்.

திட்டத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
அதன் அடிப்படையில், குறித்த ஆர்ப்பாட்டத்தை வரும் 02ம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கவுள்ளோம்.

எனவே எமது எதிர்காலத்தினை சிந்தித்து அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் அனைவரும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்கு அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |