யாழ். நெடுந்தீவில் வெடித்த மாபெரும் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு அப்பகுதி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நெடுந்தீவு - மகாவலித்துறையில் இன்று (24) காலை ஆரம்பமான குறித்த போராட்டம் நெடுந்தீவு பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று இறுதியில் பிரதேச செயலரிடம் ஜனாதிபதி, ஆளுநர், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மகஜர்களைக் கையளித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள், கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படும் குடிநீர் பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
பொதுமக்கள் புறக்கணிக்கப்படும் நிலை
மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான காணப்படும் நெடுந்தீவில் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டு வருகின்ற போதிலும் இதுவரையும் எவ்வித நடவடிக்கைகளையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை.

குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடும் நெடுந்தாரகை படகில் நூறு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லும் நிலை காணப்படுகிறது. அதிலும் எண்பது பேர் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதனால் பொதுமக்கள் இருபது பேரை மாத்திரமே ஏற்றச் செல்லமுடிகிறது.
இதனால் நேயமற்ற மற்றும் அவசர தேவை கொண்ட பொதுமக்கள் பயணிக்க முடியாது புறக்கணிக்கப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.” என தெரிவித்தனர்.
பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகள்
மேலும் “பிள்ளைளைகளுக்கான கல்வி வேண்டும்“, “சாறாப்பிட்டி நன்னீரை தாரை வார்க்காதே!“, “வரிசை யுகம் எப்போது முடியும்“, “சுத்தமான குடிநீர் வேண்டும்“, “நெடுந்தாரகைக்குள் வதைக்காதே மனிதர்களாய் நடத்து“ உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் கருப்பு துணிகளை அணிந்தும் உழவு இயந்திரத்தில் கேலிச்சித்திரங்களை உருவாக்கும் வகையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராஜா கஜேந்திரன் கலந்து கொண்டிருந்த நிலையில் அவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்குரிய மகஜரை கையளித்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகள் - கஜிந்தன், பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |