“இறப்பவர்கள் இறக்கட்டும்” என்ற அமெரிக்காவின் கொள்கையில் ஸ்ரீலங்கா! எதிர்க்கட்சி எச்சரிக்கை
நாட்டில் கொரோனா தொற்று பரவல் அபாயத்தை மேலும் அதிகரிக்கும் வகையிலேயே அரசாங்கத்தினால் தற்போது எடுக்கப்படும் தீர்மானங்கள் அமைந்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சரியான நேரத்தில் உரிய தீர்மானங்களை எடுக்காமல் ட்ரம்பினுடைய கொள்கையை பின்பற்ற முற்பட்டால் நாடு மீண்டும் பாரதூரமான நிலைமையை அடையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொமர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இறப்பவர்கள் இறக்கட்டும். தம்மை பாதுகாத்துக் கொள்ளக் கூடியவர்கள் வாழட்டும் என்ற ரீதியில் டொனால்ட் ட்ரம்ப் எடுத்த பிழையான தீர்மானமே அமெரிக்கா பாரிய அழிவுக்குச் செல்ல வழிவகுத்தது. தற்போது எமது அரசாங்கமும் அவ்வாறானதொரு கொள்கை ரீதியான தீர்மானத்தையே எடுத்துள்ளது
டெல்டா உள்ளிட்ட பல்வேறு வைரஸ் திரிபுகள் பரவ ஆரம்பித்துள்ளமையால் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது மாத்திரமின்றி சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அரசாங்கம் அதற்கு முரணாக சகல அரச உத்தியோகத்தர்களையும் சேவைக்கு அழைத்துள்ளது. இதனால் கொழும்பிற்கு பெருமளவானோர் வரக்கூடும். அத்தோடு பொது போக்குவரத்துக்களும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைப் பின்பற்றாமல் அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றிவரக் கூடும்.
இதனால் நாடு மீண்டும் பாரதூரமான நிலைக்குச் செல்லும். நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதா அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.