மகிந்தவை புறக்கணித்து மீண்டும் பிளவை உறுதிப்படுத்திய ஆளும்தரப்பு பங்காளி கட்சிகள்
அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலையை தீர்க்கும் வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்றையதினம் அலரிமாளிகையில் கூட்டிய கூட்டத்தை அரசின் பங்காளிக்கட்சிகள் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தூய ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி.வீரசிங்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,அதாவுல்லா, டிரான் அலஸ், அசங்க நவரத்ன, அதுரலிய ரத்ன தேரா் ஆகியோரே பிரதமரின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறை குறித்து இறுதி தீர்மானம் எடுக்கும் நோக்கில் இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே அலரிமாளிகைக்குச் சென்ற விமல் வீரவன்ச உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்தித்து தாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
கட்சித் தலைவர்கள் அல்லாத சிலர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதால் விமல் அணியினர் கூட்டத்தை புறக்கணித்து வருகின்றனர்.
எனினும் விமல் உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பத்தை வழங்க தீர்மானித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 11ம் திகதி மீண்டும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.