ஐ.எம்.எப் பிரதிநிதிகளுக்கும் அதிபருக்கும் இடையில் இன்று சந்திப்பு
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (26) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் முதலாம் கட்ட மதிப்பாய்வுக்காக அண்மையில் நாட்டை வந்தடைந்தனர்.
இந்நிலையில் அவர்கள், நாட்டில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்
இதேவேளை இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதி கலந்துரையாடலாக இந்த சந்திப்பு அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை இலங்கை, பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தது.
இதனடிப்படையில் சர்வதேச நாணய நிதியத்தின் பல நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.