இந்திய உயர்ஸ்தானிகருடன் பேசியது என்ன..! செல்வம் எம்.பி வெளியிட்ட தகவல்
இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
13 ஆவது சட்டச் திருத்தத்தை இலங்கையில் முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண சபைகளுக்கான தோ்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.
இதன் பின்னணியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வ கட்சிக் கூட்டம் இடம்பெற்ற போதிலும், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எந்தவொரு இணக்கப்பாடும் அதில் எட்டப்படவில்லை.
மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தமிழ் கட்சிகள் வலியுறுத்திய போதிலும் அதிபர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
இவ்வாறான சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன், கலையரசன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது அதிகார பகிர்வு, உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இன்றைய சந்திப்பின் பின் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய தூதுவருக்கும் இடையில், எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
இந்திய தூதுவரின் அழைப்பை ஏற்று நிகழும் இச்சந்திப்பில் த.மு.கூவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என த.மு.கூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.