முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அரசியல் கொள்கைகளை திணிக்க வேண்டாம் - கட்சிகளிடம் கோரிக்கை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தங்களது அரசியல் கொள்கைகளை திணிக்க வேண்டாம் அரசியல் கட்சிகளிடம் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதற்கான சாட்சியங்களாக அந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர்ந்து வருகின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில், இந்த நிகழ்வினை எவ்வாறு நினைகூருவது? தொடர்ந்தும் அரசின் அடக்கு முறைக்கு அஞ்சி கடைப்பிடிப்பதா மாறாக? நாங்கள் எழுச்சிகொண்ட மக்களாக நினைவுகூருவதா?
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாதாரண விடயமல்ல. அந்த நாளை அனைவரும் ஒன்று திரண்டு தேசிய எழுச்சிநாளாக பிரகடனப்படுத்தி நினைவுகூரவேண்டும் என்று அரசியல் கட்சி சார்ந்தவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
மக்களின் கொள்ளைக்கு மாறாக ஒவ்வொரு அரசியல் கட்சி பிரமுகர்களும் கட்சி கொள்கைகளை இங்கு வந்து பிரகடனப்படுத்துவதும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதையும் நாங்கள் காண்கின்றோம்.
மக்கள் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேசியத்தின் பெரும் சக்தியாக இந்த நாளினை நாங்கள் நினைவுகூரவேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் எழுச்சிப் போராட்டம் பெரிய அளவில் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழர்களின் உரிமைபோராட்டத்தின் பால் மரணித்த மக்களின் நினைவேந்தல் என்பது ஒரு தேசிய எழுச்சி போராட்டமாக மாற்றம் பெறவேண்டும்.
பல வலிகளை சுமந்து போராடிய எமது இனம் இன்று சாதாரண நிலமைக்குள் அரசியல்வாதிகளால் கொண்டுசெல்லப்படுவதை நாங்கள் பார்க்கின்றோம்.
தென்னிலங்கையில் சிங்கள மக்கள் ஏற்படுத்திய மக்கள் போராட்டம் அது ஒரு உணவுக்கான போராட்டம். எங்கள் போராட்டம் வயிற்று பசியினையும் பார்க்காது அதனையும் தாண்டி உரிமைப்பசிக்கான போராட்டம். இரண்டு போராட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது.
எங்கள் போராட்டத்தினை தெற்கில் கலப்பதன் ஊடாக உரிமைக்கான போராட்டத்தினை மழுங்கடிக்கும் செயலாகத்தான் இருக்கும். இந்த போராட்டத்திற்கு தமிழர்களின் அனுசரணையினை கொண்டு செல்பவர்கள் அரசாங்கத்தின் முகவர்களாகத்தான் இருக்கமுடியம். இப்போதைய சூழ்நிலையில் போராட்டத்தினை அடக்குவதற்கு அந்த போராட்டத்திற்கு பின்னால் பல சக்திகள் இருக்கின்றது.
விடுதலைப்புலிகளின் தொடர்பு இருக்கின்றது. டயஸ்போராவின் தொடர்பு இருக்கின்றது. என்று பயங்கரவாத செயற்பாடு என்று சொல்லி போராட்டத்தினை அடக்குவதற்கான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது.
இதற்கு சான்றாக இதனை உறுதிப்படுத்திக்கொண்டு எதிர்காலத்தில் இராணுவ பிரசன்னத்தினை நாட்டில் உருவாக்கி அதன் ஊடாக மக்கள் போராட்டங்களை இல்லாது ஒளித்து இராணுவ ஆட்சிமுறையினை நிறுவி அதன் ஊடாக ஆட்சியினை நிறுவலாம் என்று சிங்கள பேரினவாத சக்திகள் நினைக்கின்றன” என்றார்.
