பிரபல ஜோதிடர் கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ள செய்தி
மாகாணசபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தாமலிருப்பதற்கான ஆலோசனையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அளிக்கும்படி பிரபல பெண் ஜோதிடரான ஞானமேனி கோரியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் முனைப்புக் காட்டிவருகின்ற நிலையில், மறுபக்கம் அதற்கெதிரான எதிர்ப்புகளும் அரசாங்கத்திற்குள் வலுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு சார்பான அணியினர் மாகாண சபைத் தேர்தலை நடத்தும்படி கோரிவருகின்ற நிலையில், மறுபுறத்திலுள்ள பஸில் எதிர்ப்புக் குழுவினர் அதற்கு சாதகமற்ற கருத்தையே வெளியிட்டு வருகின்றனர்.
இதன் எதிரொலியாக அரச தலைவருக்கு ஆலோசனை வழங்கிவரும் அனுராதபுரத்தில் உள்ள பிரபல பெண் ஜோதிடரான ஞானமேனி என்பவரை சந்தித்திருக்கின்ற சில அமைச்சர்கள், மாகாண சபைத் தேர்தலை இப்போதைக்கு நடத்தாமலிருப்பதற்கான ஆலோசனையை அரச தலைவருக்கு அளிக்கும்படி கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டில் தற்போதுள்ள சூழலில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது அரசாங்கத்திற்குப் பாதக விளைவை ஏற்படுத்தும் என்பதே இந்தக் குழுவினரது கருத்தாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.