யாழில் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து சேதம்
புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று மாலை திடீரென கடும் காற்றுடனான மழை வீழ்ச்சி பதிவானது. கடும் காற்றால் பல இடங்களில் மரங்கள் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
அத்துடன் மின்சாரமும் சில இடங்களில் தடைப்பட்டது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் பெரும் சிரமங்களையும் பாதிப்புகளையும் எதிர்கொண்டனர்.
இதனிடையே நேற்றைய தினம் யாழ். நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியும் இடைநிறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (23.06.2025) வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடுமெனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை
ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
