இலங்கைக்கு படையெடுக்கவுள்ள இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்
கொவிட் தொற்றுநோய் இருந்த போதிலும், இலங்கையின் சுற்றுலாத்துறை ஜனவரி முதல் ஒக்டோபர் வரை 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga)தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்பட்டதன் பின்னர் தற்போது 70,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அதன் மூலம் இந்த வருமானம் கிடைத்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு சுமார் 200,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அடுத்த வருடத்தில் நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டு வருமென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் ஈடுபடுவோருக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசி இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு கொவிட் தொற்று இல்லாத பாதுகாப்பான நாடாக இலங்கை மாறும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை தற்போது கொவிட் தடுப்பூசியில் முன்னணியில் உள்ளதாகவும், நாட்டின் மொத்த சனத்தொகையில் 63% பேர் இந்த மாதம் 8 ஆம் திகதிக்குள் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.