இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப் பரிமாற்றம், சுற்றுலாத்துறை வருமானம் ஆகியவற்றின் வளர்ச்சியால் இலங்கையின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) பொருளாதார ஆராய்ச்சி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடமிருந்து 751 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாகவும் இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31.1 சதவீத பாரிய வளர்ச்சியாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் 378 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு ஜனவரி இறுதியில் 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ள நிலையில் சீனாவுடனான பரஸ்பர பறிமாற்றல் வசதியும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குமதியை விட ஏற்றுமதியின் வளர்ச்சி அதிகமாக இருந்ததால், வர்த்தகப் பற்றாக்குறை குறைந்துள்ளது. எனினும், ஏற்றுமதி விலைகளை விட இறக்குமதி விலைகள் வேகமாக உயர்ந்ததால் 'வர்த்தக விதிமுறைகள்' சற்றே சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 2026 ஜனவரியில் வாகன இறக்குமதிக்காக 224 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. இது டிசம்பர் மாதத்துடன் (301 மில்லியன் டொலர்) ஒப்பிடுகையில் குறைவானதாகும்.
கொழும்பு பங்குச் சந்தை
அரசாங்கப் பிணையங்கள் சந்தையில் 17 மில்லியன் டொலர் முதலீடு உள்ளீர்க்கப்பட்ட நிலையில், கொழும்பு பங்குச் சந்தையிலிருந்து 22 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 0.2 சதவீதத்தால் வலுவடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |