திருகோணமலை வைத்தியசாலைக்கு அதி நவீன இருதய சிகிச்சை வளாகம் : ஜனாதிபதி தலைமையில் அடிக்கல் நாட்டல்
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில், 8 மாடிகளைக் கொண்ட நவீன இருதய சிகிச்சை வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பங்கேற்புடன் இன்று 16ஆம் திகதி நடைபெற்றது.
சுமார் 2,403 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வளாகத்தில், இருதய நோய்களை கண்டறிதல், சிகிச்சையளித்தல் மற்றும் அவசரகால மருத்துவப் பராமரிப்பு உள்ளிட்ட நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
மக்களுக்கான பல்வேறு வசதிகள்
மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவு, கெத் லேப், ஆய்வகங்கள், எக்ஸ்-ரே சேவைகள், நூலகம் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இங்கு அமைக்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட மக்கள் மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தின் தூரப் பிரதேசங்களில் வாழும் மக்களும் தங்களுக்கு அண்மையிலேயே உயர்தர இருதய சிகிச்சை சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அவசர இருதய சிகிச்சை வசதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம், நோயாளர்களை தூர மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு மாற்ற வேண்டிய நிலையும் குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் JICA மற்றும் இந்திய அரசாங்கத்தின் கடன் உதவி உள்ளிட்ட நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவை
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், ஜப்பான் தூதரக அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

திருகோணமலை மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் இருதய சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் இந்தத் திட்டம், கிழக்கு மாகாண சுகாதாரத் துறையில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |