பண மோசடி - நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கைது!
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமினின் இளைய சகோதரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து நிதி மோசடி செய்தமை உள்ளிட்ட மூன்று முறைப்பாடுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
மோசடி
இவர் டுபாயில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக் கூறி, இரண்டரை இலட்சம் ரூபாய், ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என மூவரிடமும் நிதியைப் பெற்றுள்ளார்.
மோசடிக்கு முகங் கொடுத்தவர்கள் கலகெதர மற்றும் அக்குறணை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
அவர்கள் மூவரும் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மூவருக்கும் டுபாய் செல்வதற்கான விசாக்களை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பில் டுபாய் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு தேடியறிந்த போது வழங்கப்பட்ட மூன்று விசாக்களும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
