கன்னியாவில் பிதுர்கடன் தீர்க்க சென்றவர்களுக்கு காலக்கெடு விதித்த மதகுரு
திருகோணமலை (Trincomalee) கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் ஆடி அமாவாசை பிதுர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த பிக்கு ஒருவர் காலக்கெடு விதித்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (24) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலயத்தில் இன்று (24) வியாழக்கிழமை ஆடி அமாவாசை தீர்த்தமும், பிதுர்தர்பண நிகழ்வும் இடம்பெற்றது.
பெருமளவான பக்தர்கள்
குறித்த நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு பிதுர்தர்ப்பண வழிபாட்டிலும் தீர்த்த உற்சவத்திலும் ஈடுபட்டு தமது முன்னோர்களுக்கான கடமையை நிறைவேற்றியிருந்தார்கள்.
குறித்த நிகழ்வானது நிறைவு பெற்ற தறுவாயிலில் அங்கு இருந்த பூசைப் பொருட்கள் மற்றும் அன்னதானப் பொருட்களை ஏற்றுவதற்காக முச்சக்கரவண்டி உள்நுழைந்த போது அங்கு வருகை தந்த பௌத்த பிக்கு ஒருவர் இங்கே வாகனங்கள் உள்நுழைய முடியாது எனவும் நேரம் முடிந்து விட்டது அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறும் அங்கு சத்தம்போட்டு அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்திகயுள்ளார்.
இந்தநிலையில், பக்த அடியார்கள் உட்பட பூசகர்கள் தங்களுக்குரிய பூசைப் பொருட்களையும் அன்தான பொருட்களையும் எடுத்துக் கொண்டு அமைதியான முறையில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
குறித்த நிகழ்வை செய்வதற்காக தொல்லியல் திணைக்களத்திடம் 11.00 மணிவரை அனுமதி பெற்றிருந்த நிலையில் சம்பந்தம் இல்லாத பௌத்த பிக்கு அங்கு குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இறந்த ஆத்மாக்களுக்கான கடனை தீர்க்கும் புனிதமான நிகழ்வில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதாகவும் ஏற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
