கொலை செய்து மலசல கூட குழியில் வீசப்பட்ட தாயின் சடலம் மீட்பு -தந்தை ,மகன் கைது
2021 பெப்ரவரி மாதம் கொல்லப்பட்டு புதிதாக வெட்டப்பட்ட கழிவறை குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயின் சடலம் இன்று (31) பிற்பகல் மஹியங்கனை பதில் நீதவான் காமினி பி ரம்பகன்புர முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
இரண்டு பிள்ளைகளின் தாயான டபிள்யூ.எம்.சோமாவதி (வயது 50) என்பவரே படுகொலை செய்யப்பட்டு கழிவுநீர் குழியில் வீசப்பட்டுள்ளார். சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சுமார் 5 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதுடன், இதற்காக ரிதிமாலியத்த பிரதேச சபை ஊழியர்கள், ரிதிமாலியத்த காவல்துறையினர், பதுளை சோகோ பிரிவு அதிகாரிகள் மற்றும் மஹியங்கன நிபுணர் சட்ட வைத்தியர் தரங்க நாயக்கரத்ன ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
பச்சைப் பாயில் போர்த்தி

இறந்த உடலை பச்சைப் பாயில் போர்த்தி, தலையில் துணியால் சுற்றப்பட்டு, அதன் மேல் கம்பியால் கட்டி வீசப்பட்டுள்ளது.
உடலின் எலும்புகள் மட்டும் எஞ்சிய நிலையில்,பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மஹியங்கனை அடிப்படை வைத்தியசாலை பிணவறைக்கு அனுப்பி வைக்க மஹியங்கனை பதில் நீதவான் காமினி பி ரம்பகன்புரவினால் உத்தரவிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டு நடந்த சம்பவம்

பெப்ரவரி மாதம் ரிதிமாலியத்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட ரிதிமாலியத்த யகஹவுல்பொத்த பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.சோமாவதி (50) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 72 வயதுடைய தந்தையும் 26 வயதுடைய மகனும் கடந்த (29) கைது செய்யப்பட்டனர்.
2021 ஆம் ஆண்டு புதிதாக தோண்டப்பட்ட கழிவறை குழி ஒன்றில் தாயை கொலை செய்து சடலத்தை மறைத்து வைத்துள்ளனர்.நேற்று 31 ஆம் திகதி பிற்பகல் சந்தேக நபர்களை குறித்த இடத்திற்கு வரவழைத்து அவர்கள் காட்டிய இடத்தில் தேடிய போது இந்த சடலத்தை கண்டுபிடிக்க முடிந்தது.