ஒரு பாயும் தலையணையும்...! சபையில் தூங்கிய அர்ச்சுனா எம்பி விளக்கம்
ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய சந்தர்ப்பத்தில் இராமநாதன் அர்ச்சுனா உறங்கிக் கொண்டிருக்கும் காணாளி ஒன்று தற்போது வெளியாகி பேசு பொருளாகி உள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு பிச்சை
அவர் மேலும் விளக்கமளிக்கையில், இந்த தடவை வடக்கு மாகாணத்துக்கு பிச்சை இல்லை! ஜனாதிபதியின் பேச்சு புத்தகமாக தரப்பட்டிருக்கிறது.

வடக்கு மாகாணத்துக்குரிய எந்த சிறப்பு நிதியும் எங்கேயும் இல்லை! வடக்கு மாகாணத்துக்கு எந்த நிதியும் இந்த முறை பாதீட்டில் குறிப்பிட்ட அளவாக ஒதுக்கப்படவில்லை.
போன முறை ஐயாயிரம் மில்லியன் பாதை, 1500 மில்லியன் வட்டுவாகல் பாலம் என்றெல்லாம் ஏமாற்றப்பட்டோம். நூலகத்துக்கு 200 மில்லியன் என்றார்கள். இந்தத் தடவை எதுவுமே இல்லை!
போன தடவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்பது தசம் மூன்று மில்லியன் கூட பாவிக்கவில்லை.
நித்திரை கொள்ளாமல் என்ன செய்வது
வடக்குக்காக ஒதுக்கப்பட்ட 5000 மில்லியன் பாவிக்கப்படவுமில்லை. திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

திருப்பி கிடைக்கப் போவதுமில்லை நித்திரை கொள்ளாமல் வேறு என்ன செய்வது? ஒரு பாயும் தலையணையும் இருந்தால் நீட்டி நிமிர்ந்து படுத்திருப்பேன்! பெரிய ஆசையுடன் நாடாளுமன்றத்திற்கு காலையிலேயே வந்திருந்தேன்.
மிகப்பெரிய ஏமாற்றம்.. இடையில் எழும்பி போனால் சரியில்லை தானே! என பதிவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |