கிராம அலுவலர் மீதான தாக்குதல்: இளங்குமரன் எம்.பிக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (20-01-2026) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது, பரந்தன் இந்து மகா வித்தியாலய நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களைப் பராமரித்துக் கொண்டிருந்த கிராம அலுவலர் மீது இளங்குமரன் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இடம்பெற்ற விசாரணை
இதனடிப்படையில், இன்று இடம்பெற்ற விசாரணையின் போது கிராம அலுவலர் சார்பாகச் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
இந்தநிலையில், கடந்த 16 ஆம் திகதி இவ்வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இளங்குமரன் மன்றில் முன்னிலையாகவில்லை.

இதனால் நேற்றை தினம் அவரை முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில், நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் இருப்பதனால், அதில் கலந்துகொள்வதற்காக இளங்குமரன் நேற்று முன் தினமே (19-01-2026) நகர்த்தல் பத்திரம் ஒன்றினைத் தாக்கல் செய்து மன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இதன்போது, ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார். குறித்த வழக்கானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |