நாடாளுமன்றத்திற்கு முன் போராட்டம் நடத்தியவர்களை நேரடியாக சென்று சந்தித்தார் முஜிபுர் ரஹ்மான்
நாடாளுமன்ற சுற்றுவட்டப் பகுதியிலுள்ள தியவன்னா ஓயா பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கோவில் மோட்டை விவசாயிகளை நேரடியாக சென்று சந்தித்து பிரச்சினையை கேட்டறிந்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.
மன்னார் மடுக் கோயில் மோட்டை அரச காணியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் நாடாளுமன்றப் பகுதியில் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (21) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
தாம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் கோயில் மோட்டை காணிகளை பறிக்க முற்படும் மன்னார் பங்குத்தந்தைகளை கண்டித்தும், குறித்த காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மத்தியரசு அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையிலேயே சம்பவ இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், விவசாயிகளின் பிரச்சினையை கேட்டறிந்ததுடன், உங்கள் தொகுதி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
தவிர வட்டிக்கு பணம் கொடுத்த நந்தினிக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியுமா? நந்தினி GA அவர்களே பல மேடைகளில் அரசியல் செய்த அரச ஊழியர் நீங்களே என்பது தெரியும், மன்னாரில் புதிதாக மத அரசியல் செய்யாதீர்.
85 வீதம் கிறிஸ்தவர்கள் இருக்கும் கோயில் மோட்டை விவசாயகளின் பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்றாதே.
உங்களால் ஒழுங்கமைக்கப்படும் கேலிக்கூத்து போராட்டங்கள் முடிவிற்கு வரும் வரை, காணிக்கான எங்களின் போராட்டம் உயிர் மூச்சு வரை தொடரும்.
போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் காட்ச்சிப்படுத்தியிருந்தனர்.
மேலும் இதே இடத்தில் இந்த மாதம் (ஒக்டோபர்) கடந்த 06-ம் திகதி மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோயில் மோட்டை விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.