சமுர்த்திப் பயணாளியின் கணக்கிலிருந்த பணம் மாயம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் வசிக்கின்ற நபர் ஒருவருடைய சமுர்த்தி வங்கியில் சேமிப்பு கணக்கில் இருந்த நிதி தனக்கு அறிவிக்கப்படாமல் மீளப்பெறப்பட்டமை தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இன்று விசாரணைகள் இடம் பெற்றது.
குறித்த நபருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்காக நிதி வைப்பிலிடப்பட்டு அவருடைய வீட்டுத் திட்டத்தின் முதற்கட்ட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக உரிய அதிகாரிகள் ஒப்பமிட்டுள்ள பேதும் அவருடைய கணக்கிற்கு நிதி வைப்பிலிடப்பட்டிருந்த நிலைமையில் குறித்த பயனாளிக்கு தெரிவிக்கப்படாமல் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரதேச செயலாளரால் மீளப்பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தன்னுடைய சேமிப்புக் கணக்கில் இருந்த பணத்தை தன்னுடைய அனுமதி இல்லாமல் திருடி உள்ளதாக குற்றம் சாட்டி மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் குறித்த கணக்கு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் மற்றும் முறைப்பாடு வழங்கிய நபரை அழைத்து விசாரணகளை மேற்கொண்ட பொலிசார் இன்று பிரதேச செயலாளரை சந்தித்த பின்னர் குறித்த விடயம் தொடர்பில் தீர்வினை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் முறைப்பாட்டாளரையும் பிரதேச செயலகத்திற்கு அழைத்து வந்த மாங்குளம் பொலிசார் பிரதேச செயலகத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த விசாரணைக்கு, தான் வேண்டுமென்றே அலைக்கழிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த விசாரணையில் எந்தவிதமான பலனும் இல்லை எனவும், குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு கோரப்பட்ட போதும் பொலிசார் இழுத்தடித்து வருவதாக குறித்த நபர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று விசாரணைக்கு அழைத்த முறைப்பாட்டாளரை தன்சார் நியாயப்பாடுகளை கேட்க பொலிசார் அனுமதிக்கவில்லை. அவர் அரச அதிகாரி எனவும் எவ்வித வினாக்களையும், நியாயப்பாடுகளையும் கேட்க வேண்டாம் என பொலிசாரால் ஆரம்பத்திலேயே முறைப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் கூறியதை குறிப்பெடுத்த பொலிசார் முறைப்பாட்டாளரை வேண்டுமென்றே அலைக்கழிதுள்ளதா பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கின்றார்.
நிதி மோசடி செய்த இரு அரச அதிகாரிகளை பாதுகாக்க மாங்குளம் பொலிசார் முனைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவருக்கு நீதியை பெற்றுக்கொடுத்து குற்றம் நிரூபிக்கப்படின் அவர்களை தண்டனைக்குட்படுத்த பொலிசார் தவறியுள்ளதாகவும் அவர் ஆதங்கம் வெளியிடுகிறார். குறித்த வழக்கை நீதிமன்ற விசாரணைக்குட்படுத்த பொலிசார் தயக்கம் காட்டுவதானது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது எனவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.