முல்லைக் கடலில் மாயமான வவுனியாவைச் சேர்ந்த மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்பு!...
வவுனியாவில் இருந்து வருகை தந்து முல்லைத்தீவு கடலில் குளிக்கச் சென்ற போது மாயமான மூன்று இளைஞர்களில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மூன்றாவது நபரின் சடலமும் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடலில் காணாமால் போன நிலையில் தேடும் பணிகளை காவல்துறையினர், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட வந்த நிலையில் இரண்டாவது நபரின் உடலம் இன்று காலை தீர்த்தக்கரை பகுதியில் மீட்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் மூன்றாவது நபரின் சடலம் சற்று முன்னர் அளம்பில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது
முதலாம் இணைப்பு
வவுனியாவில் இருந்து சென்று முல்லை கடலில் மாயமான நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு இளைஞனின் சடலம் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வானில் வந்த மூன்று இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.
குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு காவல்துறையினரிற்கு தகவல் வழங்கியதையடுத்து காவல்துறை, கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
தேடுதலின் போது ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.
குறித்த இளைஞர்களில் மதவுவைத்த குளத்தை சேர்ந்த மனோகரன் தனுஷன் (வயது - 27), சிவலிங்கம் சகிலன் (வயது -26) தோணிக்கல் பகுதியை சேர்ந்த விஜயகுமாரன் தர்சன் (வயது - 26) ஆகியோரே கடலில் மாயமாகியிருந்தனர்.
நேற்றைய தேடுதலின் போது ஒருவருடைய சடலம் மீட்கப்பட்ட நிலையில் மற்றுமொருவருடைய சடலம் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.