யாழ். சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
புதிய இணைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலை நிகழ்ந்த இடங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் (17.05.2025) நவாலியில் அமைந்துள்ள சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கொட்டும் மழைக்கும் மத்தியிலும் ஈகைச் சுடர் ஏற்றி மலர்தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் இணைத்து கொண்டனர்.
ஐந்தாம் இணைப்பு
முள்ளிவாய்க்கல் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று அராலியில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சபேசனின் ஏற்பாட்டில் தமிழரசுக்கட்சி அராலித் தொகுதிக் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
நான்காம் இணைப்பு
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு இளைஞர்களால் இன்று (16) காலை 10.00 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது தமிழின படுகொலையில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
"உடல் சிதைந்து உயிர் மடிந்த குருதியில் நனைந்து போன நிலம் மறந்து போகுமா? முள்ளிவாய்க்கால்" என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில் வடமராட்சி கிழக்கு இளைஞர்கள், பொது மக்கள், தமிழ் தேசிய உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் நாவற்குழி வாழ் இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாவற்குழியில் முன்னெடுக்கப்பட்டது.
நாவற்குழி சந்தி சுற்றுவட்டம் பகுதியில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது.
இதில் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - மடத்தடி பகுதியில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
வீதியில் சென்ற மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் இணைப்பு
யாழில் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்
இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) ஏற்பாட்டில் இன்றையதினம் சங்கானை நகரப் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில், முன்னாள் போராளியான ஜெயசீலன் நினைவுச் சுடரினை ஏற்றி வைத்தார்.
அதன்பின்னர் இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்திக்காக இரண்டா நிமிட அக் வணக்கம் செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் கஞ்சி
அதன்பின்னர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், பிரதேச சபையின் உறுப்பினர்களான ஜெயந்தன், கந்தையா இலங்கேஸ்வரன், ஜெசிந்தன், ஆதவன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இரண்டாம் இணைப்பு
யாழ் - வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் (15) நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் (TNPF) முன்னெடுக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை பேருந்து நிலையத்தில் வைத்து உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி பரிமாறப்பட்டது.
இந் நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K. Shivajilingam) மற்றும் செ.கஜேந்திரன் (S. Kajendren) , சட்ட ஆலோசகர் நடராஜா காண்டீபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
யாழின் பல்வேறு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
தமிழ் இனப்படுகொலையை நினைவுகூரும் முகமாக மே மாதம் 12ஆம் திகதி முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில் நினைவேந்தலின் ஒரு அம்சமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு, கிழக்கு உட்பட தமிழர் தாயகம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13) யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு தரப்பினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல்
அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) வடமராட்சி கிளையினரின் ஏற்பாட்டில் நெல்லியடி பேருந்து நிலையத்தில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது முள்ளிவாயக்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டதுடன் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் - கைதடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) கலந்துகொண்டார்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இணைந்திருந்தனர்.
இதேவேளை மக்கள் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வாங்கி அருந்திச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





