சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபயவுக்கு முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வழங்கியுள்ள அறிவுரை
நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையை பெற வேண்டும் என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அபயராம விகாரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இராணுவத்தினரால் அனைத்து விடயங்களையும் திறன்பட செயற்படுத்த முடியாது. நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையை பெற வேண்டும்.
சிறந்த தரப்பினரை உள்ளடக்கிய ஆலோசனை சபையை ஜனாதிபதி ஸ்தாபிக்க வேண்டும். கொவிட் தாக்கத்தின் காரணமாக சுபீட்சமான கொள்கை திட்டத்தை ஜனாதிபதியால் செயற்படுத்த முடியாமல்போயுள்ளது.
இனி வரும் காலங்களிலாவது சுபீட்சமான கொள்கை திட்டத்தை செயற்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை பெற வேண்டும்.
இதேவேளை, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளும் போது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள். சதொச விற்பனை நிலையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் இந்நிலை தொடர்ந்தால் 'சீனி கொவிட் கொத்தணி' தோற்றம் பெறும் என்றார்.