இலங்கையை வந்தடைந்தார் இசைஞானி! கோலாகலமாக இடம்பெறவுள்ள இசைநிகழ்ச்சி
கொழும்பில் பிரம்மாண்டமாக இடம்பெறவுள்ள இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜா தான் இசை நிகழ்ச்சிக்காக இசைஞானி இளையராஜா உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி இந்த இசை நிகழ்ச்சியானது இன்றும் (20) நாளையும் (21) கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இன்று (20) மாலை 6.30 அளவில் இந்த இசை நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பமாகி இன்றும் நாளையும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளின் பின்
இந்த நிகழ்ச்சியில் பாடகர்களான மனோ, மதுபாலகிருஸ்ணன், ஸ்வேதா மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பிக்கவுள்ளனர்.

சுமார் 30 ஆண்டுகளின் பின்னர் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக ஏற்கனவே நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டவர்கள் அந்தந்த நாட்களில் அதாவது சனிக்கிழமைக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றவர்கள் இன்றைய தினமும் ஞாயிற்றுக் கிழமைக்கான நுழைவுச் சீட்டுக்களை பெற்றவர்கள் நாளைய தினமும் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாத்தியக்கருவிகளை இசைத்தவர்கள்.
அதுமாத்திரமன்றி, 80களில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு வாத்தியக்கருவிகளை இசைத்த அதே கலைஞர்கள் இந்த இசை நிகழ்ச்சியிலும் பங்கேற்கவுள்ளமை விசேட அம்சமாக அமைந்துள்ளது.

முன்னதாக இந்த இசை நிகழ்ச்சியானது கடந்த ஜனவரி மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நிலையில், இளையராஜாவின் புதல்வியும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்