முஸ்லிம் மக்களுக்கு கண்கட்டு வித்தை காட்டும் முஸ்லிம் கட்சிகள்
கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களை பிரிதிநித்துவப்படுத்தும் இரு கட்சிகளும் கண்துடைப்பு வேலையை செய்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மக்களை ஏமாற்றும் வகையில் கட்சிகள், தமது தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
சிறிலங்காவின் கோட்டா - மஹிந்த தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்று, தமது தேர்தல் வாக்குறுதியாக கூறியிருந்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றியிருந்தது.
இந்த அரசியலமைப்பிற்கு சிறுபான்மைக் கட்சிகள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்த போதிலும், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் அதனை ஆதரித்து வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்து கட்சியின் தீர்மானத்தை மீறியதாக தெரிவித்து குறித்த இருவரும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இதற்கு பின்னர் கொழும்பு துறைமுக நகர சட்டமூலத்திற்கும் இவர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், அதன்போதும் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவித்தது.
இந்த விடயம் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், கடந்த 22 அம் திகதி சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பட்டது.
எனினும் வழமைப்போலவே நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோர் வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளித்திருந்ததுடன் அவர்களுக்கு மேலதிகமாக கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான முஷாரப் முதுநபீனும் ஆதரவளித்த நிலையில், கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் மாத்திரம் எதிர்த்து வாக்களித்தார்.
இந்நிலையில் மீண்டும் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், குறித்த மூவரையும் கட்சியிலிருந்து இடைநிறுத்துவதுடன் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த விடயம் கட்சியின் கண்கட்டு வேலையை அம்பலப்படுத்தியுள்ளது. கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் இடைநிறுத்தப்படவதாக அறிவிக்கப்பட்டு வருவதுடன், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தலைமை, ஏமாற்று வேலையை செய்துவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் கட்சியின் தீர்மானத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை அறிவித்திருந்த நிலையில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே அதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
ஏனைய உறுப்பினர்களான பைசல் காசிம், நஸீர் அஹம்மட், எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், தெளபீக் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் குறித்த ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் கட்சியில் வகித்து வரும் பதவிகளிலிருந்து உடனடியாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்து நடந்தமைக்காக அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைமைகள் மாத்திரமே சிறுபான்மை மக்களின் கருத்துக்களுக்கு அமைவாக தீர்மானங்களை எடுத்துவரும் நிலையில், கட்சிகளின் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு மாறாக செயற்பட்டு வருகின்றமை இரு கட்சிகளுக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.