நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்! சபாநாயகர் அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தாம் கடமைப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்களின் பாதுகாப்பை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் கடந்த தினங்களில் அவைக்குள் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் அப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான பரிந்துரைகளை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழுவை பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டி குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் சமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், அனுரபிரியதர்ஷன யாப்பா, விஜித ஹேரத், ரஞ்சித் மத்தும பண்டார, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குழுவின் உறுப்பினர்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று நாடாளுமன்றத்தில் தன்னை சந்தித்து, அவர்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியதாக சபாநாயகர் கூறியுள்ளார்.
“அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை வழங்க தேவையான சகல நடவடிக்கைகளையும் நான் எடுத்துள்ளேன் என்பதை கௌரவ சபைக்கு அறிய தருகிறேன். எவ்வாறாயினும் கடந்த தினங்களில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் அமைதியாக நாடாளுமன்ற அவையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் குறிப்பாக உரையாற்றும் போது ஆவேசமாக பேசுதல் அல்லது தனிப்பட்ட ரீதியிலான அவதூறுகளை தவிர்க்க வேண்டியதன் அத்தியவசியத்தை கடுமையாக வலியுறுத்துகிறேன்”. என சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.