அநுர வசிக்கும் இல்லத்துக்கு அருகில் கூட கொலை! நாமலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வசிக்கும் இல்லம் அருகே கூட கொலைச் சம்பவங்கள் நடைபெறும் நிலையில், நாட்டில் பொது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தினசரி துப்பாக்கிச்சூடுகளை தடுக்க முடிந்துவிட்டதாக அமைச்சர்கள் கூறினாலும், அதில் அவர்கள் தோல்வியடைந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களின் பாதுகாப்பு
முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் பெலவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் எடுக்கப்படுகின்றன என அமைச்சர்கள் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அதே பகுதியான அகுரேகொடவில் சமீபத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, இவ்வாறான சூழலில் மக்களின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் நீதிமன்ற அறைக்குள் நடந்த கொலை சம்பவம் மற்றும் நீதிமன்ற வளாகம் அருகே சட்டத்தரணி ஒருவர்மீது நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற சம்பவங்களையும் அவர் அதன்போது நினைவூட்டியுள்ளார்.
அத்தோடு, சட்டவிரோத கஞ்சா பயிரிடல் தொடர்பான சோதனையின்போது ஒரு காவல்துறை அதிகாரியை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் எம்.பி கொலை
இந்நிலையில், சுகாதார அமைச்சர் மருத்துவர்களுக்கு எதிராக பொதுமக்களின் மனநிலை திரும்பக்கூடும் என எச்சரித்ததாகவும், அரசாங்கம் தனது எதிர்ப்பாளர்களை அடக்க பொதுமக்கள் அழுத்தத்தை பயன்படுத்த முயற்சிக்கிறது என்றும் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

அரகலய காலத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதை சிலர் விமர்சித்திருப்பதையும் அவர் அதன்போது எடுத்துரைத்துள்ளார்.
அதன்படி, நீதித்துறை, மருத்துவர்கள் உள்ளிட்ட தரப்புகளை அடக்குவதன் மூலம் அரசு நீடிக்க முடியும் என்று கருதினால் அது வெற்றியடையாது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |