தேசிய கல்வியியற் கல்லூரி, ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில்...
தேசிய கல்வியியற் கல்லூரிகளை இணைத்து ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை அங்கீகார பத்திரத்தினை நடைமுறைப்படுத்தாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தொழிற்சங்கம் நேற்றைய தினம் திங்கட்கிழமை (04) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவுக்கு கடிதம் மூலம் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அறிவித்துள்ளனர்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “மேன்மை தங்கிய அரசதலைவர் கோட்டபாய ராஜபக்க்ஷவின் சுபீட்சமான எதிர்கால நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட தாதியர் கல்வி மற்றும் ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழகங்கள் இரண்டினை ஸ்தாபிப்பதற்காக 1978ஆம் ஆண்டு 16 ஆம் இலக்கமுடைய பல்கலைக்கழக சட்டமூலத்தை திருத்தி முன்னாள் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ், 2020 /12 /14 ஆம் திகதி அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்து அனுமதியை பெற்றவுடன் விசேட நோக்கங்களுக்கான பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டது.
இந்த முன்மொழிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான வர்த்தமானி பத்திரத்தை இப்போது நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் இந்தச் செயன்முறையினை தடுப்பதற்காக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் உபாலி சேதர மீண்டும் தலையிட்டுள்ளதாக தெரிகின்றது.
தற்போது கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இந் நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தி பல கடிதங்கள் எங்களுடைய தொழிற்சங்கத்தினால் தற்போதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதே போல் எங்களுடைய தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், பீடாதிபதிகளுக்கும் அமைச்சரைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தினை பெற்றுத் தரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
2020/ 09 /15ஆம் திகதி முற்பகல் 11. 30 மணிக்கு கல்வி அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குவதாக கூறி பீடாதிபதிகள் சில மணித்தியாலங்கள் நிகழ்நிலை தொடர்புடன் வைத்திருந்து இறுதியில் அந்தக் கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டது.
பின்னர் கல்வி அமைச்சர், கல்விச் சீர்திருத்த இராஜாங்க அமைச்சர், அந்த அமைச்சின் இராஜாங்க செயலாளர் உட்பட ஒரு குழுவினருடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளமை எங்களுக்கு அறியக்கூடியதாக இருந்தது.
கல்வியியற் கல்லூரிகளின் முன்னோடிகளான பீடாதிபதிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் சகல கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற விரிவுரையாளர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்காது ஒருதலைப்பட்சமாக முடிவெடுப்பதற்கு நடவடிக்கையை மேற்கொண்ட விதம் தெளிவாகின்றது.
மேன்மை தங்கிய அரச தலைவரின் கொள்கைப் பிரகடனத்தை மாற்றத்திற்குள்ளாக்கி கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகளினதும் விரிவுரையாளர்களினதும் கருத்துக்களுக்கு இடமளிக்காது இதுவரை கல்வியியற் கல்லூரிகளில் பண்புத்தர தொடர்பாக கவனம் செலுத்தாத தேசிய கல்வி நிறுவகத்தில் பொறுப்புதாரியின் கருத்திற்கமைய மாத்திரம் இறுதி முடிவு எடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எங்களது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்வதுடன் 2020 / 3 / 11 ஆம் திகதியிலிருந்து நாம் இதுதொடர்பான எங்கள் உறுதியான நிலைப்பாட்டை அந்தந்த காலத்திற்கு கல்வி அமைச்சராக பணியாற்றிய டளஸ் அழகப்பெருமவுக்கும், பேராசிரியர் ஜீ.எல். பீரிசுக்கும் அறிவித்துள்ளோம்.
கல்வி அமைச்சராக இருந்த ஜீ.எல்.பீரிஸ் எங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்து அனுமதியைப் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் வரை எங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு செல்வோம் என்பதனை தயவாக அறியத்தருகின்றோம்.
இதற்கிணங்க 2021/ 06 /30, 2021 /07/05 மற்றும் 2021/09/15 ஆகிய திகதிகளில் இடப்பட்ட கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டதற்கிணங்க, 2021/10/02 ஆம் திகதியிலிருந்து கீழ்க்குறிப்பிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்கின்றோம் என்பதனை அறியத் தருகின்றோம்.
1. ஒன்று கல்வியற் கல்லூரிகளிலும் ஆசிரியர் கலாசாலைகளிலும் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் கடமைகளில் இருந்து முழுமையாக விலகிக் கொள்ளல்.
2. இரண்டாம் வருட பயிற்சி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் நிகழ்நிலை வகுப்புக்கள், நிகழ்நிலை கணிப்பீடுகள், நிகழ்நிலை இணைப்பாடவிதான செயற்பாடுகள் என்பவற்றில் இருந்து முழுமையாக விலகிக் கொள்ளல்.
3. மூன்றாம் வருட மாணவர்களின் கணிப்பீட்டுப் பணிகளிலிருந்து விலகிக் கொள்ளல். (பரீட்சை, புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தல், கணிப்பீடு தொடர்பான உரிய நிறுவனங்களுடனான பணிகளில் இருந்து விலகிக் கொள்ளல்)
4. ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலையங்களில் நடத்தப்படும் மொடியுல் வேலைத்திட்டங்களிலிருந்து விலகிக் கொள்வதுடன் அந்த நிறுவனங்களில் நடாத்தப்படும் ஏனைய எல்லா கடமைகளிலும் இருந்து விலகி சேவைக்கு செல்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ளல்.
5. ஆசிரியர் கலாசாலைகளில் நடாத்தப்படும் நிகழ்நிலை கற்பித்தல், நிகழ்நிலை மூலம் மேற்கொள்ளப்படும் கணிப்பீடு மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் இருந்து விலகிக் கொள்ளல்.
6. எதிர்காலத்தில் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கல்லூரிகள் திறக்கப்படும் போது இந்த பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்வரை சகல ஆசிரிய கல்வியியலாளர்களும் சேவைக்கு அறிக்கையிடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ளல்.
அதேபோன்று கல்வியியல் கல்லூரிகள் 19 னையும் இணைத்து ஆசிரிய கல்வி பல்கலைக்கழகத்தை தாபிப்பதற்கு எதிராக இருக்கின்ற கல்விச் சீர்திருத்த அமைச்சின் இராஜாங்க செயலாளர் உள்ளடங்கலாக குழுவினருக்கு எதிர்ப்பை தெரிவித்து ஊடக கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை வெளிக்காட்டல், அந்தந்த கல்வியியற் கல்லூரிகளை மையமாகக்கொண்டு பிரதேச ரீதியாக ஆசிரிய பயிலுனர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியோரை இணைத்து எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளல், கல்வியமைச்சு முன்னால் உண்ணாவிரதம் இருத்தல், போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதனை அறியத்தருகின்றோம்.
இந்த எல்லா எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கு இது தொடர்பாக 2020/ 12/ 14 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட அமைச்சரவை முன்மொழிவுக்கு இணங்க, தாதியர்கள் பல்கலைக்கழகத்தை நிறுவுவது போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் நிறுவப்படும் என எழுத்து மூலம் உடன்பாட்டினை பெற்றுத் தருவதன் மூலம் மாத்திரமே ஆகும்.
இக் கடிதத்தில் தேசிய கல்வி நிறுவகம் எந்த விதத்திலும் உள்ளடக்கப்படமாட்டாது என்பதனை கடிதத்தில் குறிப்பிடப்படல் வேண்டும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கடிதத்தின் பிரதிகள், கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைகளுக்கான மேலதிக செயலாளர் , பரீட்சை ஆணையாளர் நாயகம், , பிரதம ஆணையாளர் (ஆசிரியர் கல்வி), தேசிய கல்விக் கல்லூரிகளின் சகல பீடாதிபதிகள், ஆசிரியர் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர் வாண்மைவிருத்தி நிலையை முகாமையாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.