தேசிய ரீதியில் சாதனை படைத்த யாழ். யுவதி
யாழை சேர்ந்த யுவதி தேசிய ரீதியாக நடைபெற்ற 10 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்குபற்றி, முப்படை வீரர்கள் மற்றும் ஏனைய போட்டியாளர்களுடன் போட்டியிட்டு மூன்றாவது இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) - பொன்னாலை பகுதியை சேர்ந்த தமிழரசி ஜீவேஸ்வரன் என்ற யுவதியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த யுவதி கருத்து தெரிவிக்கையில், நான் இந்த ஆண்டு union national meet இல் 10 ஆயிரம் மீட்டர்கள் வேகநடை போட்டியில் மூன்றாமிடம் வந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளேன்.
வேகநடைப் போட்டியில் தங்கப்பதக்கம்
இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு பாடசாலை மட்ட ரீதியாக 5 ஆயிரம் மீட்டர்கள் வேகநடைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளேன்.
அதைவிட மாவட்ட மற்றும் மாகாண மட்ட போட்டிகளிலும் கலந்துகொண்டேன். நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் முப்படை வீரர்களுடன் போட்டியிட்டே இந்த மூன்றாவது இடத்தை பெற்றுள்ளேன்.
எனது ஆரம்பகால பயிற்றுனராக சுபாஸ் ஆசிரியர் மற்றும் நிசாந்தன் அண்ணா, பிரதீஸ் அண்ணா ஆகியோர் காணப்படுகின்றனர்.
திட்டமிட்ட சதி
கடந்த வருடம் நான் ஆசிய தெரிவுப் போட்டிக்கு சென்று முப்படையினருடன் போட்டியிட்டு 10 பேருக்குள் வந்தேன்.
அதில் பழிவாங்கும் முகமாக என்னை மைதானத்துக்குள் இறங்குவதற்கு விடாமல் செய்தார்கள். பின்னர் பயிற்றுவிப்பாளர் விஜிதரன் ஆசிரியரே கதைத்து என்னை போட்டியிட அனுமதி பெற்றுத் தந்தார்.
இருப்பினும் திட்டமிட்ட சதி போல பவுல் அடித்து நிறுத்திவிட்டார்கள். தமிழர் - சிங்களவர் என்ற பாகுபாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு செய்வதாக நான் நினைக்கிறேன்.
இம்முறை பொட்டு எதுவும் நெற்றியில் வைக்காமல் ஒரு சிங்கள யுவதி போலவே சென்றேன். இந்தமுறை பவுல் அடிக்கவில்லை என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
