யாழில் மக்களின் குடிநீர் கிணறுகளில் அதிகளவு நீரை பெறும் இராணுவம்! முன்வைகப்பட்டுள்ள குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கு பிரதேசத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்படுவதாக குறித்த பிரதேச சபையின் உறுப்பினர் ஐ.நாகரஞ்சினி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு முன்பாக உள்ள வீதியில் அமைந்திருக்கும் முன்பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றிலிருந்து கடற்படையினர் தினமும் தண்ணீரை எடுத்து செல்வதாகவும் இதனால் தண்ணீர் வளம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது.
தண்ணீர் போதாமல் உள்ளது
இதன்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “பிரதேச சபையினால் மக்களுக்கு கொடுப்பதற்கே தண்ணீர் போதாமல் உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் கடற்படையினர் ஊருக்குள் வந்து தினமும் பத்தாயிரம் லீட்டர்களுக்கும் அதிகமான தண்ணீரை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு தினமும் அதிகளவான தண்ணீரை எடுத்து செல்வதால் வளம் பாதிக்கப்படுகிறது.
அந்த தண்ணீரை இனிமேல் கடற்படையினர் எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது என்பதனை எனது பிரேரணையாக முன்வைக்கிறேன். எனவே இந்த விடயம் குறித்து உரிய கடற்படை முகாமுக்கு பொறுப்பான அதிகாரிக்கு பிரதேச சபையினால் கடிதம் அனுப்ப வேண்டும்.
அராலித்துறை இராணுவ முகாம்
இதேவேளை, அராலி ஆலடி பகுதியில் உள்ள வயற்காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து அராலித்துறை இராணுவ முகாமுக்கு தினமும் மூன்று தடவைகள் 30,000 லீட்டர்களுக்கும் அதிகமான தண்ணீர் எடுக்கப்படுகிறது.
அந்த வயற்கிணற்றில் இருந்து எடுக்கும் தண்ணீரையே மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர். இராணுவத்தினர் இவ்வாறு தினமும் தண்ணீர் எடுப்பதால் அந்த கிணற்று நீர் உவர் நீராக மாறியுள்ளது.
இப்போது அப்பகுதி மக்கள் கட்டணம் செலுத்தி பிரதேச சபையிடமிருந்தே தண்ணீரை பெறுகின்றனர். இருப்பினும் பிரதேச சபையினாலும் மக்களுக்கான தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகளது விவசாயமும் பாதிப்படையக்கூடிய அபாயம் காணப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
