மூன்று மாதங்களில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செயல்படுத்தப்படும் - சத்தியமூர்த்தி நம்பிக்கை!
எதிர்வரும் மூன்று மாதங்களில் கோம்பயன் மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செயல்படுத்தப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்றையதினம் (12) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மருத்துவக் கழிவுகள்

"கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டி அமைப்பதற்காக யாழ்.மாநகர சபையோடு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உரிய காணிப்பகுதி தெரிவு செய்யப்பட்டு இருக்கிறது, குறித்த காணிப்பகுதி சீரமைக்கப்பட்டு மதில் சுவர் பகுதி அமைக்கப்பட்டு எரியூட்டி இயந்திரம் பொருத்தப்பட இருக்கிறது. ஆகவே அது எதிர்வரும் மூன்று மாதங்களில் செயல்படுத்தப்படும் என நம்புகின்றேன்.
அதற்கு முன்னதாக தெல்லிப்பழை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் எரியூட்டிகள் செயல்படும் இடங்களில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுகின்றன, மருத்துவக் கழிவுகள் அளவுக்கு அதிகமாகின்ற போது தெற்கு பகுதிகளில் இருக்கின்ற தனியார் எரியூட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்'' என தெரிவித்தார்.