நேபாளத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மீட்பு பணிகள்: 90,000 இற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 543 ஆக உயர்ந்துள்ளது.
இவ்விபத்தில் 1,500 இற்கும் மேற்பட்டோர் இன்னமும் மாயமாகியுள்ள நிலையில், மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பனிப்பாறை உடைந்ததால் (Glacial Collapse) ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான தடுப்பு ஏரி உடைந்ததால், திரிசூலி ஆற்றுப் படுகைப் பகுதிகள் நீரில் மூழ்கின.
திடீர் வெள்ளம்
இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நேபாளத்தில் மட்டும் 538 பேரும் மற்றும் திபெத் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த மேலாண்மை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் ராசுவா மாவட்டத்தில் உருவான செயற்கை ஏரி நிரம்பி வழிந்ததால் ஏற்பட்ட இரண்டாம் கட்ட வெள்ள அபாயம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள், தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்ட்டு வேகப்படுத்தப்பட்டுள்ளன.

அத்தோடு இதுவரை 117 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 320 இந்தியர்கள் உட்படப் பல வெளிநாட்டவர்கள் இன்னமும் மாயமாகியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் தொடர்கின்றன.
மேலும் நுவாகோட் மற்றும் பிதுர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளம் மற்றும் சேற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 90,000 இற்கும் மேற்பட்ட மக்கள் இப் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |