அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்துள்ள எதிர்கட்சிகள்...! அம்பலப்படுத்திய அமைச்சர்
அரசாங்கம் சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு நீதித்துறை சுதந்திரம் மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ராஜபக்சக்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹரகம பகுதியில் நேற்று (27-08-2026) நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடி
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினரே மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளனர்.
இந்தத் திருத்தம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் முற்றிலும் சாதகமானதே தவிர எவ்விதத்திலும் பாதகமானதல்ல.

எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானோர் ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பலர் பிணையில் உள்ளவர்களுமாவர்.
கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருவதனாலேயே இவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை
ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர அது மக்களின் பிரச்சினையல்ல.
இந்த நாட்டில் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை ராஜபக்சக்களின் காலத்தில் தான் முழுமையாக இல்லாமல் போனது.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அவர்கள் முறையற்ற வகையிலேயே பதவி நீக்கம் செய்தனர்.
அதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |