பாடசாலைகளில் வசூலிக்கப்படும் பணம்! அரசாங்கத்திற்கு வந்த அறிவுறுத்தல்
பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பண வசூலிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டுமெனில், சுற்றறிக்கை 5/2015-ஐ இடைநிறுத்துவது அவசியம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர், அரசின் இந்த முடிவை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றறிக்கை 5/2015-ஐ உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாடசாலையின் செலவினம்
“இந்த சுற்றறிக்கையின் படி, ஒரு பாடசாலையின் மொத்த செலவினம் மாணவர்களின் எண்ணிக்கையால் வகுக்கப்பட்டு, அந்தத் தொகை மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உயர்நிலைப் பாடசாலைகளில் ரூ. 8,000 முதல் ரூ. 11,000 வரையிலும், ஆரம்பப் பாடசாலைகளில் ரூ. 3,000 வரையிலும் பெற்றோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பெற்றோர்கள் இந்தச் செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலையில் உள்ளனர்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போது சில பாடசாலைகளில் வர்ணம் பூசுதல் (painting) போன்ற பணிகளுக்காகவும் பெற்றோரிடமிருந்து பணம் வசூலித்து வருவதாகவும், இது அரசின் பொறுப்பு என்றும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, பாடசாலைகளில் எந்தவிதமான பண வசூலும் செய்யக்கூடாது எனத் தெளிவாகத் தடை விதிக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டாலேயே இந்த உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்த முடியும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் அறிவிப்பு
அத்துடன், புதிய சுற்றறிக்கையை மீறி பண வசூலில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அரசின் முயற்சிகள் தோல்வியடையும் என்றும் ஜோசப் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்த ஆண்டில் பெற்றோரிடமிருந்து எந்தவிதமான பணமும் வசூலிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
“யாராவது பணம் வசூலித்து வந்தால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும். பாடசாலைகளில் பணம் வசூலிக்கக் கூடாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் ஏற்கனவே உத்தரவு வழங்கியுள்ளார்,” எனவும் பிரதமர் கூறியிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |