டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 1000 பேருக்கு புதிய வீடுகள் : வெளியான தகவல்
நாட்டில் கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் இடைக்கால வீடுகளை அமைக்கும் பணிகள் மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, குறித்த திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்த சுமார் 1,000 பேருக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தற்காலிக வீடுகளை குறுகிய காலத்திற்குள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
இலங்கை இராணுவத்தின் பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் மனிதவள பங்களிப்புடன் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் இந்த முயற்சி அரசாங்கத்தின் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.

திட்டத்தை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிப்பதை உறுதி செய்வதற்காக, தெளிவான கால அட்டவணையுடன் கூடிய விரிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு இராணுவத்திற்கு இராஜாங்க அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதுடன் இப்பணிகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்தைப் பேணுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
வீடுகளை நிர்மாணிப்பதற்கான பொருத்தமான காணித் துண்டுகளை அடையாளப்படுத்தும் பணிகள் அந்தந்த மாவட்டச் செயலர்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாதுகாப்பான தரநிலைகளுக்கு இணங்கவே இந்தக் காணிகள் தெரிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |