புரட்சிப் பாடகர் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமானார்!
ஈழத் தமிழர்களின் போராட்ட உணர்வுகளைப் பிரதிபலிக்கும் புரட்சிப் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா காலமாகிவிட்டார்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள சிங்கிலிப்பட்டி என்னும் ஊரில் பிறந்த இவர் இன்று (28.04.2026) தனது 85 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
துயரங்களையும், விடுதலையின் அவசியத்தையும் எளிய மக்களுக்கும் புரியும் வகையில் பாடி, கலை மூலம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்திய அவரது மறைவு ஒட்டுமொத்த தமிழினத்திற்கும், இசை ஆர்வலர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
வழங்கப்பட்ட பட்டம்
தமிழர் தாயகத்தின் விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்திய பாடல்களின் ஒரு தனித்துவ புரட்சி குரலாக இருந்த இவர் சி.பா. ஆதித்தனார் 1950களில் ஆரம்பித்த நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து, தமிழின எழுச்சி இசைப் பாடல்களை பாடிய செல்லப்பாவுக்கு அன்று ஆதித்தனார் தேனிசை செல்லப்பா என்ற அடையாளத்தை பட்டமாக வழங்கியிருந்தார்.

அன்றுமுதல் தமிழ்த் தேசியவாதியாக இருந்த அவர் ஈழவிடுதலை பாடல்களை பாடி தமிழர்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார்.
ஈழப் போராட்டத்தின் உணர்வுகளையும், விடுதலைப் புலிகளின் தியாகங்களையும் தனது கணீர் குரலால் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த இவரது பாடல்கள் விடுதலைப் போர் முரசு, புதுவேட்டு புலிப்பட்டு, புலிகள் ஓய்வதில்லை, மற்றும் தமிழர் தாகம் போன்ற பல இசைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன.
ஆயிரக்கணக்கான மக்கள்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பெரும் பற்றுக் கொண்ட இவர் இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட பின்னர் தமிழ்நாட்டில் ஈழ விடுதலை ஆதரவாளர்கள் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்ட போதும், தமிழ்நாட்டில் தடையையும் மீறி – தேனிசை செல்லப்பா குழுவினரின் ஈழ ஆதரவு எழுச்சி இசை தொடர்ந்திருந்தது.
தேனிசை செல்லப்பாவின் இசைக் குழுவில் அவர் மகனும் மகளும் உணர்வுடன் பங்கெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி உட்பட்ட தமிழர் தாயகத்தின் பகுதிகளிலும் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் விடுதலை இசை நிகழ்சிகளை அவர் நடத்தியபோது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
இந்தநிலையில் தேனிசை செல்லப்பா இன்று தனது அகவை மூப்பால் காலமாகிய நிலையில் அவருக்கு தமிழ்தேசிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவ்வுலகை விட்டுப் பிரிந்த தேனிசை செல்லப்பாவினுடைய உடல் வஞ்சுவாஞ்சேரி - படப்பையிலுள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |