சாலே கைதின் புதிய வெளிப்பாடுகளும்... அடுத்த கைதும்...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டதற்கான காரணம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தற்காலிக விதிகளின் கீழ்தான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
அதன்படி, அவரை 72 மணி நேரம் காவலில் வைத்து விசாரிக்க சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கிடைத்த தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக, இன்று (25) பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் காவல்துறை மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
ஏப்ரல் 21, 2019 அன்று , சஹாரான் ஹாஷிம் தலைமையிலான மிருகத்தனமான குழு நாடு முழுவதும் 8 இடங்களில் 10 தாக்குதல்களை நடத்தி 273 பேரைக் கொன்றது.
பின்னர், தொடர்புடைய தொடர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டன, மேலும் நாடாளுமன்ற சிறப்புக் குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணையம் மூலமாகவும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
நேரடி தொடர்பு
அந்த விசாரணைகள் அனைத்திலும் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டிருந்த நௌபர் மௌலவி உட்பட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கு தற்போது தினசரி விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், தாக்குதலுக்குப் பின்னால் ஒரு அரசியல் கை இருப்பதாக சில தரப்பினர் தொடர்ந்து குற்றம் சாட்டினர். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.
இதற்கிடையில், பிரித்தானியாவின் சேனல் ஃபோர் ஒளிபரப்பிய SRI LANKA'S EASTER BOMBINGS; DISPATCHES என்ற ஆவணப்பட நிகழ்ச்சியின் மூலம், முன்னாள் இராணுவ புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஒரு கூட்டம், ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக நாட்டில் பாதுகாப்பின்மை சூழ்நிலையை உருவாக்க திட்டமிடப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது ஒரு காலத்தில் பிள்ளையானின் ஊடக செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றி, இப்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கும் அசாத் மௌலானாவின் அறிக்கையுடன் இணைந்து கூறப்பட்டது.
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய இரகசிய விசாரணை தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் கூடுதல் தகவல்களை வழங்கியிருந்தது.
இந்த நிலையிலேயே, புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, இன்று காலை பேலியகொட பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இன்று முன்னெடுக்கப்பட்ட சுரேஸ் சாலேயின் கைதின் பின்னர் இந்த வாதங்கள் எழுந்துள்ளன.
சுரேஸ் சாலே
வெளிநாடுகளில் இருந்து வெளியான அறிக்கைகள் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த கருத்துகள் ஆகியவை இந்த விவகாரத்தை புதிய கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளன.
சுரேஸ் சாலே மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது கைது செய்தி அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கைது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு ஆலேசகரான ரொஹான் குணவர்த்தன பக்கமும் திரும்பியுள்ளது.
ரொஹான் குணவர்த்தன 03.05.2021 அன்று தேசிய பாதுகாப்பு நிறுவன இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட ஒருவராவார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அதிகம் பேசப்பட்டவர்களுல் ரொஹான் குணவர்த்தனவும் ஒருவராவார்.
ரொஹான் குணவர்த்தன ஒரு பயங்கரவாத ஆய்வாளர் மற்றும் பாதுகாப்பு நிபுணர். அவர் குறிப்பாக 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பல கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
ரொஹான் குணவர்த்தன இந்த தாக்குதல் சர்வதேச தீவிரவாத வலையமைப்புகளுடன் தொடர்புடையது என்று அவர் வலியுறுத்தினார்.
உள்ளூர் குழு மட்டும் அல்லாது, வெளிநாட்டு ஆதரவு மற்றும் பயிற்சி இருந்திருக்கலாம் என்றார். பாதுகாப்பு அமைப்புகளின் தகவல் பகிர்வு தோல்வி தாக்குதலைத் தடுக்க முடியாமல் செய்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பின்னணியில் எதிர்காலத்தில் அவரிடமும் விசாரணை செய்யப்படலாம் என எதிர்வுகூறல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் முக்கிய கைதுகள் தலைப்பு செய்திகளாக வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.
ரொஹான் குணவர்த்தன
இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவென்றால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சுரேஸ் சாலேயும் பின்னாளில் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ரொஹான் குணவர்த்தனவும் பிள்ளையானை கை காட்டுவார்களா என்பதே.

இந்நிலையில் சுரேஸ் சாலே தாக்குதல் நடைபெற்ற நாளில் நாட்டில் இல்லை என வாதிட்டு வந்தாலும், வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சில சாட்சியங்கள் இந்த நிலைப்பாட்டுக்கு முரண்பட்ட தகவல்களை முன்வைக்கின்றன.
அவ்வாறென்றால் இந்த விசாரணை எங்கிருந்து ஆரம்பமாகபோகின்றன?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தாக்குதலுக்கு பின்னராக சர்வதேச ரீதியில் திரும்பி பார்க்க வைத்த விடயம் chanal 4 ஆவணப்படம்.
அதில் சுரேஸ் சாலே முதல் பல்வேறு தரப்பினர் தொடர்பில் குற்றச்சாட்டுக்களையும் பின்னணியையும் வெளியிட்டவர் பிள்ளையானின் பிரத்தியேக செயலாளராக கருதப்படும் அசாத் மௌலான.
ஆக இந்த விசாரணைகள் அசாத் வெளியிட்ட கருத்துக்களை வைத்தே நகரப்போகிறது.
அசாத் மௌலானா சுவிட்சர்லாந்திலிருந்து வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கை இந்த விவகாரத்தின் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
2023 ஒகஸ்ட் 12 அன்று வெளியிடப்படவிருந்த தகவல்கள் பின்னர் வெளியானது.
அவரது சாட்சியங்களின் அடிப்படையில் ஐரோப்பிய புலனாய்வு பிரிவுகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதுவரை 24 சந்தேகநபர்கள் விசாரணை வளையத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்குப் பிரதான காரணம்
இங்கு ரொஹான் குணவர்த்தன தனது ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளில், ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிரதான காரணம் சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவும், இலங்கையில் செயல்பட்டதாகக் கூறப்படும் Islamic State (ISIS) அமைப்பின் உள்ளூர் கிளையும் என வாதிட்டுள்ளார்.

அவரது கருத்துப்படி, மூளையாக யாரும் செயற்படவில்லை. அவ்வாறு வேறு யாரும் அல்ல. சஹ்ரான் குழுவே இதற்குப் பின்னணி என்றார்.
ஆனால் இந்தக் கருத்துக்கள், முன்னாள் உயர் காவல்துறை அதிகாரிகள் சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன தாக்கல் செய்த உச்ச நீதிமன்றப் பிரமாணப் பத்திரங்களுடன் முரண்படுவதாக கூறப்பட்டது.
மேலும், ரொஹான் வெளியிட்ட அறிக்கையில், “அபுவிந்த்” என்ற நபர் தென்னிந்திய இரகசியப் புலனாய்வு அமைப்பால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம் என கூறப்பட்டுள்ளது. இந்த கூற்று கூடுதல் சர்ச்சையை உருவாக்கிய ஒன்று.
கோட்டாபய காலத்தில் இருந்து நிலுவையில் உள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு அநுர ஆட்சியில் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பின்னணியிலும் தற்போது சூடுபிடித்துள்ள நிலையிலும், சந்தேகநபர்களுக்கு சார்பான பல சட்டத்தரணிகள் விலகியுள்ளதாக சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக பிள்ளையான் மற்றும் ISIS தொடர்பான 2018 ஆம் ஆண்டுக் குற்றச்சாட்டு சந்திப்பு குறித்து வெளிவந்த தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாதவையாக உள்ளன.
ஆனால் ரொஹான் குணவர்த்தன பதவியில் இருந்த காலத்தில், அவர் மட்டக்களப்பு சிறையில் பிள்ளையானைச் சந்தித்திருந்தார்.
இந்த விவகாரம் அரசியல் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் உட்புற தொடர்புகளைப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.
இவ்வாறான பின்னணியில் இன்று இடம்பெற்ற காவல்துறை ஊடக சந்திப்பில் முக்கிய சில கேள்விகள் எழுப்பப்பட்டன.
சாரா எங்கே
அதில் குறிப்பாக சுரேஸ் சாலே பிள்ளையானுக்கு அப்பாற்பட்டு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

முன்பிருந்தே சாராவின் டி.என்.ஏ பரிசோதனை தொடர்பில் கேள்விகள் காணப்படுகின்றன. இவர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் முக்கிய சந்தேகநபராக கருதப்பட்டவர். இந்த குண்டுவெடிப்பில் அவர் உயிரிழந்ததாக முந்தைய பரிசோதனை அறிக்கைகள் விவரித்தன.
எனினும் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் “சாரா” என அடையாளம் காணப்பட்ட நபர் தொடர்பில் மூன்றாவது டி.என்.ஏ பரிசோதனை குறித்த விவாதம் எழுந்து.
சில தரப்புகள் அவர் உயிருடன் இருக்கலாம் எனக் கூறிவந்தனர். குறிப்பாக அவர் இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையிலேயே அமைச்சர் ஆனந்த விஜேபால அவர் உயிருடன் இருக்கின்றார். ஆனால் இந்தியாவில் இல்லை என திடம்பட கூறியிருந்தார்.
இதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கேள்விகளுக்கு விடை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மை இன்னும் முழுமையாக வெளிச்சமிடப்படாத பின்னணியில் சுரேஸ் சாலே கைதானது பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இதன்மூலம் சாரா தொடர்பில் ஏதேனும் தகவல் வெளிவந்தால் அது திரைமறையில் உள்ள ஏதேனும் ரகசியங்களை அம்பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக இந்த தாக்குதலில் மூளையாக செயற்பட்டவர் யார்?
இதில் சர்வதேச தொடர்புகள் இருந்ததா?
மேலும் அரசியல் விசுவாசிகள் பாதுகாக்கப்பட்டார்களா?
அல்லது இது முழுமையாக சஹரான் தலைமையிலான தீவிரவாதத் திட்டமா? என்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டியது அவசியமாகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |