விரைவில் வந்து சேரும் - இலங்கைக்கு இந்தியா அளித்த உறுதிமொழி
இலங்கைக்கு வழங்கவுள்ள ஒரு பில்லியனுக்கும் அதிக கடன்தொகை விரைவில் வந்து சேருமென இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும்(S. Jaisankar), நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிற்கும்(Basil Rajapaksa) இடையில் இணைய வழி சந்திப்பொன்று இடம்பெற்ற நிலையிலேயே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அண்மையில் வழங்கிய 900 மில்லியன் டொலர் அந்நிய செலாவணிக்கான நிவாரணம் குறித்தும், கடனுதவித் திட்டங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவினால் ஒரு பில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளதுடன், எரிபொருள் கொள்வனவுக்காக மேலும் 500 மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிதித் தொகையை விரைவில் வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என இந்திய வெளிவிகார அமைச்சர் கூறியுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் வரவேற்றுள்ளார்.
இதேவேளை, இலங்கை சிறைகளிலுள்ள மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க இந்த சந்திப்பின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவிடம் வலியுறுத்தியுள்ளார்