ட்ரம்புக்கு எதிராக வெடித்த போராட்டம் : பெண் செய்தியாளர் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் (United States) - லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பெண் செய்தியாளர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் நிர்வாகத்தில் பல்வேறு-அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
அதன்படி “அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை” என்ற கொள்கையை கடைப்பிடிக்கும் அவர் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறவும் உத்தரவிட்டார்.
சட்டவிரோதமாக குடியேறி
இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஜனாதிபதி ட்ரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.
இதையடுத்து நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய குடியேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
குறிப்பாக கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது.
ஊடகவியலாளர் மீது தாக்குதல்
இந்த வன்முறையை கட்டுப்படுத்த லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் நடந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறையை கட்டுப்படுத்த இராணுவ வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் புல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஊடகவியலாளர் லாரன் டோமாசி சென்றிருந்தார்.
அங்கு வன்முறை நடைபெறும் பகுதிக்கு சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து ஊடகவியலாளர் லாரன் விளக்கிக் கொண்டிருந்தார்.
இதன்போது, காவல்துறை அதிகாரி ஒருவர் ரப்பர் புல்லட் துப்பாக்கியால் லாரனை குறிவைத்து சுட்டார். இந்த சம்பவம் காணொளியிலும் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து லாரன் பணிபுரிந்து வரும் தனியார் செய்தி நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், "லாரனும், அவருடன் சென்ற புகைப்பட கலைஞரும் தற்போது நலமாக உள்ளனர்.
அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்து செய்து வருவார்கள். போராட்டங்களின்போது முன்களத்தில் நின்று பணியாற்றும் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளை இந்த சம்பவம் தெளிவாக நினைவூட்டுகிறது.
முக்கிய தகவல்களை வழங்குவதில் செய்தியாளர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இது உணர்த்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
