மாகாண சபைத் தேர்தல் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (21) முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பு தமக்குக் குழுவின் மூலம் விடுக்கப்பட்டுள்ளதை தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
மாகாண சபைத் தேர்தலை தற்போதைய சூழலில் எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கும் நாடாளுமன்றத்தினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம்
அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் இயங்கும் இந்த விசேட நாடாளுமன்றக் குழு, தேர்தல் முறைமை மற்றும் சட்டச் சிக்கல்கள் குறித்து ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் கூடி ஆராய்ந்துள்ளது.
அத்துடன் அண்மையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் இந்த விசேட குழுவின் முன்னிலைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்போது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தற்போதிருக்கும் சட்ட ரீதியான தடைகள் மற்றும் சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து விரிவான அறிக்கை ஒன்றைத் தயாரித்துச் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு இந்த விசேட குழுவினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தேர்தலை நடத்துவதற்கான நடைமுறைச் சாத்தியக்கூறுகள் மற்றும் ஆணைக்குழுவின் நிலைப்பாடுகளைக் கேட்டறிவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று விசேட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |