நிந்தவூர் பிரதி தவிசாளர் உறுப்பினர் மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!
நிந்தவூர் பிரதேச சபையினுள் பாராளுமன்ற உறுப்பின் தலைமையயிலான குழு ஒன்று உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தலைமறைவாகிய நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (10.12.2025) உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தலைமறைவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பிரதேச சபையின் தவிசாளர் அண்மையில் பதவி விலக்கப்பட்டார் இந்த நிலையில் பிரதி தவிசாளர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த சட்டத்தரணி எம்.ஜ. இர்பான்; சபை நடவடிக்கையினை மேற்கொண்டு வந்துள்ளார்.
சம்பவத்தின் பின்னணி
இந்நிலையில் சம்பவ தினமான திங்கட்கிழமை பகல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் பிரதி தவிசாளர் அறையில் உள் நுழைந்து சபை நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என தெரிவித்து பிரதி தவிசாளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

அங்கு சென்றகாவல்துறையினர் இது நிர்வாக ரீதியான பிரச்சினை எனவே கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற பிரதி பணிப்பாளரிடம் முறையிட்டு இதற்கான தீர்வை பெறுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதையடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இதனைத்தொடர்ந்து பிரதி தவிசாளர் தனது சபை கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பிற்பகல் 2 மணியளவில் பிரதி தவிசாளரின் காரியாலயத்துக்குள் அத்துமீறி உள் நுழைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தலைமையிலான 30 பேர் கொண்ட அடியாட்களுடன் உள் நுழைந்து மேசையில் இருந்த பொருட்களை உடைத்து எறிந்து பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதில் இருவரும் காயமடைந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ள நிலையில் இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 12 பேரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய நடவடிக்கையினை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர் என காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தலைமறைவாகிய இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையம் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவன் முன்னிலையில முன்னிலைப்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை தலைமறைவாகியுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட குற்ற விசாரணை பிரிவு காவல்துறையினர் முன்னெடுத்துவருவதுடன் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு நாடாளுமன்ற சபாநாயகரிடம் அனுமதியை பெறும் நடவடிக்கையின் முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |