உதய கம்மன்பிலவின் கைது குறித்து சி.ஐ.டி வெளியிட்ட அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை (Udaya Gammanpila) கைது செய்வது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தன்னை கைது செய்யத் தயாராவதால், தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரி உதய கம்மன்பில நீதிப் பேராணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த நீதிப் பேராணை மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இதன்போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுதர்ஷன டி சில்வா, மனுதாரர் உதய கம்மன்பிலவை கைது செய்வது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, குறித்த மனு பரிசீலனைக்காக எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
