அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை - நீதி அமைச்சர் யாழில் தெரிவிப்பு
அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி (Ali Sabri) தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர், அவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“ பயங்கரவாத தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் முதல் தடவையாக நாம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அல்லது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை அல்லது விடுதலை அளிப்பது தொடர்பாக அரச தலைவருக்கு பரிந்துரைகளை முன்வைக்கும் ஆலோசனை குழுவை முன்னாள் பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தலைமையில் நியமித்தோம்.
இந்தக் குழுவுக்கு 44 விண்ணப்பங்கள் கிடைத்தன. அவை ஆராயப்பட்டன. அதன் அடிப்படையில் 27 பேரை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது திருத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் அதனை முழுமையாக மாற்றியமைக்கும் திட்டமும் இருக்கின்றது” என்றார்.