மறந்து போய் கைகளில் கற்களை எடுக்காதீர் - அதனால் அரசுக்கே நன்மையெனவும் எச்சரிக்கை (படம்)
நாளை மறுதினம்(09 ஆம் திகதி) அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எவரும் மறந்துபோயும் கற்களை வீசுவதற்கு முயற்சிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (07) காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள் குழு ஒன்று சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த அவர்,நாளை மறுதினம் 09 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம். இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த போராட்ட இயக்கத்தில் கலந்துகொள்ளும் எந்தவொரு குடிமகனும் எந்த வகையிலும் கைகளில் கல்லை எடுத்து வீச வேண்டாம். இது வன்முறையாக மாறினால் இதனால் அரசு பயன்பெறும் என தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர், செயற்பாட்டாளர்கள் முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர்களையும் சந்தித்திருந்தனர்.
