பயணிகளிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட நடத்துநர்: 8 நாட்கள் பணித்தடை
பயணிகளுடன் தரக்குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இருவேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தனியார் பேருந்து நடத்துநர் ஒருவருக்கு எட்டு நாட்கள் தொடர்ச்சியான பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 07.03.2026 அன்று அதிகார சபையின் திடீர் பரிசோதனை உத்தியோகத்தர்கள் பேருந்தில் சோதனையில் ஈடுபட்ட போது விதிமீறலுக்காகக் குற்றப்பத்திரிகை வழங்க அனுமதிப்பத்திரத்தைக் கோரிய அதிகாரிகளை குறித்த நடத்துநர் அவமதித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர்கள்
இதனைத் தொடர்ந்து கடந்த 26.03.2026 அன்று காலை பரந்தனிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சேவையின் போதும் அவர் பயணிகளிடம் தரக்குறைவாகப் பேசியுள்ளமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபரின் சுய ஒழுக்க மீறல் மற்றும் அவர் நடத்துநராகவோ அல்லது சாரதியாகவோ கடமையாற்றத் தகுதியற்றவர் என இனங்காணப்பட்டமையால் வடக்கு மாகாணத்தில் இயங்கும் எவ்வித பயணிகள் பேருந்திலும் அவர் கடமையாற்ற முடியாதவாறு இந்த எட்டு நாட்கள் பணித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறிச் செயற்பட்டால் குறித்த நபருக்கும் அவரைச் சேவையில் ஈடுபடுத்தும் பேருந்து உரிமையாளருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் இவ்வாறான ஒழுக்க மீறல்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் எவ்வித அசௌகரியங்களை எதிர்கொண்டாலோ அல்லது நடத்துநர்கள் மற்றும் சாரதிகளின் தரக்குறைவான செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டாலோ அது தொடர்பான முறைப்பாடுகளை ஒளிப்படங்கள் அல்லது காணொளிகளுடன் 071 9090900 என்ற வட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |