அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு - மட்டு ஊடக அமையம் கண்டனம்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தி சேகரிக்க சில ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு மட்டு ஊடக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் மட்டு ஊடக அமையம் குற்றம் சுமத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போது ஊடகவியலாளர் சிலர் அதில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அனுமதி மறுப்பு

மட்டு. ஊடக அமைப்பின் செயலாளர் செ.நிலாந்தன், பொருளாளர் பு.சசிகரன் மற்றும் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஊடகவியலாளர்கள் சிலருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்தி மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு நிர்வாகம் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் ஆகியோர் தங்களது தனிப்பட்ட கட்சி அரசியலை முன்னிலைப் படுத்தி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற பதவியை துஷ்பிரயோகம் செய்து வருவதாக மட்டு ஊடக அமையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மாவட்ட ஊடகவியலாளர்கள் மீது தான்தோன்றித் தனமான அழுத்தங்களை பிரயோகிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் மட்டு. ஊடக அமையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுமதி மறுக்கப்பட காரணம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் தன்னிச்சையான முடிவு என அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் யார் என தீர்மானிக்கும் அதிகாரத்தை மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு வழங்கியது யார்? எனவும் மட்டு ஊடக அமையம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரச தகவல் திணைக்கள அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் மாத்திரம் ஊடகவியலாளர்கள் என அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதா எனவும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக ஊடகவியலாளர்களாக பணியாற்றுவோரை ஊடகவியலாளர்கள் இல்லை என்று அடையாளப்படுத்தும் அதிகாரம் அபிவிருத்திக் குழுத் தலைவர் போன்ற அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்தி சேகரிக்கும் பணிக்கு அச்சுறுத்தல்

அத்துடன் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஊடகவியலாளர் குறித்த தனிப்பட்ட கருத்துக்களை, அபிப்பிராயங்களை விவாதிப்பது குறித்த ஊடகவியலாளரின் செய்தி சேகரிக்கும் பணிக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் எனவும் மட்டு ஊடக அமையம் தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டின் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது என்றும், மாவட்டத்தில் உள்ள ஊடக அமைப்புக்கள், ஊடகவியலாளர்களை அழைத்து மாவட்ட அபிவிருத்தி குழு இது குறித்து பேசவேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இது போன்ற அநீதிகள் ஏற்படாதவாறு மாவட்ட அபிவிருத்திக் குழு செயற்பட வேண்டும் என மட்டு ஊடக அமையம் கேட்டுக்கொண்டுள்ளது.