காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்களால் அலுவலக செயற்பாடுகள் பாதிக்கப்படாது - ஓ.எம்.பி அறிவிப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் தமது அலுவலக செயற்பாடுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என காணாமல் போனோர் ஆட்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அலுவலகத்தின்(ஓ.ம்.பி) தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் நாளைய தினம் நினைவு கூரப்படவுள்ள நிலையில், மன்னாரிலும், மட்டக்களப்பிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நீதிகோரி பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை எதிர்வரும் 6 மாத காலத்துக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக காணாமல் போனோர் ஆட்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் அலுவலகத்தின் தவிசாளர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
நினைவூட்டல்
இதனூடாக, அடுத்த ஒருவருடத்துக்குள் சிறந்த முன்னேற்றம் எட்டப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு விவகாரத்தில் தமது அலுவலகம் தலையீடு செய்து, அகழ்வு நடவடிக்கைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு ஏதுவான வகையில் 57 இலட்சம் ரூபாவை உடனடியாக ஒதுக்கீடு செய்துள்ளதாக மகேஷ் கட்டுலந்த நினைவூட்டியுள்ளார்.
விசாரணை
கொக்குத்தொடுவாயில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதா, அல்லது விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களா அல்லது இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களா என்பது அடுத்த கட்டப் பரிசோதனைகள் மற்றும் விசாரணைகளின் பின்னர் தெரிய வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரை இலக்காகக் கொண்டு தாம் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என மகேஷ் கட்டுலந்த கூறியுள்ளார்.